ஹுப்பளி: இந்தியாவின் கர்நாடக மாநிலம், ஹுப்பளி நகரில் நிகழ்ந்த சமையல் எரிவாயு உருளை வெடிப்பில் காயமுற்ற ஐயப்ப பக்தர் ஒருவர் உயிரிழந்தார்.
ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 22) இரவு அந்நகரில் இருக்கும் சிவன் கோயில் ஒன்றில் நிகழ்ந்த வெடிப்பில் ஒன்பது ஐயப்ப பக்தர்கள் மோசமான தீக்காயங்களுக்கு ஆளாயினர் என்று முன்னதாகத் தெரிவிக்கப்பட்டது. காயமுற்ற பக்தர்கள், சம்பவம் நிகழ்ந்தபோது உறங்கிக்கொண்டிருந்தனர் எனக் கூறப்பட்டது.
அவர்களில் ஒருவர் வியாழக்கிழமை (டிசம்பர் 26) காலை மாண்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன. அச்சம்பவத்தில் ஐயப்ப பக்தர்கள் இருவர் பலியாகிவிட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
காயமுற்ற எஞ்சிய ஐயப்ப பக்தர்கள் ஹுப்பளியின் கர்நாடக மருத்துவக் கல்லூரி, ஆய்வுக் கழகத்தில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி. பரமேஷ்வரா, அம்மருத்துவமனைக்குச் சென்று காயமுற்றோரை நேரில் சந்தித்தார்.
காயமுற்றோருக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு வழங்க வேண்டுகோள் விடுக்கப்போவதாக திரு பரமேஷ்வரா எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டுள்ளார்.