புதுடெல்லி: இந்தியாவில் உயர்கல்வி கற்க சிறந்த இடமாக சென்னையிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி சென்னை) தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்தியத் தர மதிப்பீட்டு வாரியமும் (NBA) இந்தியக் கல்விநிலையத் தரவரிசைக் கட்டமைப்பும் (NIRF) இணைந்து வெளியிட்ட தரப் பட்டியலில், ஒட்டுமொத்த அளவில் ஐஐடி சென்னை முதலிடம் பிடித்துள்ளது.
பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகம் (IISc) இரண்டாமிடத்தையும் ஐஐடி மும்பை மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளன.
இந்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் திங்கட்கிழமையன்று (ஆகஸ்ட் 12) புதுடெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், மத்தியக் கல்வி அமைச்சு இப்பட்டியலை வெளியிட்டது.
என்ஐஆர்எஃப் தரப்பட்டியலில் ஐஐடி சென்னை முதலாவதாக வந்திருப்பது இது ஆறாவது முறை.
அத்துடன், தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக இந்தியாவின் ஆகச் சிறந்த பொறியியல் கல்லூரி என்ற பெருமையையும் அது பெற்றுள்ளது.
மேலாண்மைக் கல்வியைப் பொறுத்தமட்டில், அகமதாபாத், பெங்களூரு, கோல்கத்தா ஆகிய இடங்களில் அமைந்துள்ள இந்திய மேலாண்மைக் கழகங்கள் முதல் ஐந்து இடங்களுக்குள் வந்துள்ளன.
பெங்களூரு இந்திய அறிவியல் கழகம், இந்தியாவின் ஆகச் சிறந்த பல்கலைக்கழகமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
என்ஐஆர்எஃப் தரப் பட்டியல் நடவடிக்கையில் இம்முறை 10,885 உயர்கல்வி நிலையங்கள் பங்கெடுத்தன.

