ஜேவார்: ஆசியாவிலேயே மிகப்பெரிய விமான நிலையமாக உருவாகிவரும் ஜேவார் அனைத்துலக விமான நிலையத்தின் முதல் முனையத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சனிக்கிழமை (மார்ச் 28) தொடங்கி வைத்தார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஜேவார் பகுதியில் அமைந்துள்ள இந்த விமான நிலையத்திலிருந்து ஒவ்வோர் இரண்டு நிமிடங்களுக்கு ஒரு விமானம் புறப்படும். இது உத்தரப்பிரதேசத்தின் இணைப்பையும் வளர்ச்சியையும் பெருமளவில் ஊக்குவிக்கும் என்று அவர் கூறினார்.
டெல்லியின் இரண்டாவது அனைத்துலக விமான நிலையமான ஜேவார் விமான நிலையம் “ஒட்டுமொத்த வட இந்தியாவையும் உலகத்துடன் இணைக்கிறது,” என்றார் அவர்.
ஜேவார் விமான நிலையம்: வட இந்தியாவை உலகத்துடன் இணைக்கும் புதிய நுழைவாயில்
விமான நிலையத்தின் முதற்கட்டப் பணிகள் கிட்டத்தட்ட 11,200 கோடி ரூபாய் (S$1.5 பில்லியன்) முதலீட்டில் நிறைவடைந்துள்ளன.
இது முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும்போது ஆண்டுக்கு 7 கோடி பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாக இருக்கும்.
ஏறக்குறைய 7,200 ஏக்கர் பரப்பளவில், ஆறு ஓடுதளங்களுடன் அமையவுள்ள இந்தப் மிகப்பெரும் திட்டம், நியூயார்க்கின் சென்ட்ரல் பூங்காவைவிட எட்டு மடங்கு பெரியதாகும்.
சுவிட்சர்லாந்தின் ‘சூரிச் ஏர்போர்ட் இன்டர்நேஷனல்’ நிறுவனம் இதில் முக்கிய முதலீட்டாளராக உள்ளது.
எரிபொருள் மீதான வரியைக் குறைத்து விமான நிறுவனங்களை ஈர்த்து வருகிறது. இண்டிகோ நிறுவனம் இங்கிருந்து தனது சேவையைத் தொடங்கும் முதல் நிறுவனமாக ஒப்பந்தம் செய்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
விமான நிலைய வருகையால் ஜேவார், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது.
மிகப் பெரும் தொழில்துறை வளர்ச்சித் திட்டம்
தொழில் துறையினரைப் பெருமளவில் ஈர்க்கும் விதமாக, விமான நிலையத்தைச் சுற்றி தொழில், தளவாடங்களை மையமாகக் கொண்ட தொகுப்புகள் (கிளஸ்டர்கள்) உருவாக்கப்பட்டுள்ளன.
விளைநிலங்கள் தொழிற்சாலைகளாகவும், வணிக வளாகங்களாகவும் மாறி வருகின்றன. ஆடைப் பூங்கா, மருத்துவப் பூங்கா, பொம்மை உற்பத்திப் பூங்காக்கள் அமையவுள்ளதால் இப்பகுதி ஒரு தொழில்துறை மையமாக உருவெடுத்துள்ளது.
எனினும், அதிவேக ரயில், சாலை இணைப்புகள் முழுமையடைய இன்னும் சில ஆண்டுகள் ஆகும். நவி மும்பையில் அதானி குழுமம் உருவாக்கிய இரண்டாவது விமான நிலையத்தைப் போலவே, ஜேவார் விமான நிலையமும் இந்தியாவின் வான்வழிப் போக்குவரத்து வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
உலகளாவிய விமானப் போக்குவரத்து மையமாக இந்தியாவை உருவாக்கும் திட்டத்தில் இந்த விமான நிலையம் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.
இது ஐரோப்பாவின் நுழைவு வாயிலாக விளங்கப் போகிறது என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

