கரூர்: கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், செப்டம்பர் 27ஆம் தேதியன்று பிரசாரக் கூட்டம் நடத்தியபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், அதுதொடர்பான வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ விசாரித்து வருகிறது. முன்னதாக, கடந்த 17ஆம் தேதி கரூர் வந்த சிபிஐ குழுவிடம், கரூர் காவல்துறை மற்றும் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினர் ஆவணங்களை ஒப்படைத்தனர்.
இதையடுத்து, சிபிஐ குழுவைச் சேர்ந்த ஆய்வாளர் மனோகரன், கரூர் குற்றவியல் நீதிமன்றம் 2ல் நீதிபதி சார்ல்ஸ் ஆல்பர்ட் முன்னிலையில் முதல் தகவல் அறிக்கையைக் கடந்த 22ஆம் தேதி தாக்கல் செய்தார்.
அதில், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி. மதியழகன், பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணைச் செயலாளர் நிர்மல்குமார் மற்றும் தவெகவினர் பலர் எனக் குறிப்பிட்டு, விசாரணையைத் தொடர உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரூர் குற்றவியல் நீதிமன்றம் 1ல் சிபிஐ தாக்கல் செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின் நகலைக் கேட்டு தவெக வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து, அந்த நகல் அவர்களிடம் வழங்கப்பட்டது.

