சிங்கப்பூருக்கு அரிசி ஏற்றுமதி செய்ய அனுமதிப்பது என்று முடிவுசெய்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இருதரப்பு நலன்கள், அணுக்கமான பொருளியல் ஒத்துழைப்பு, நெருங்கிய மக்கள் தொடர்பு என இந்தியாவும் சிங்கப்பூரும் மிக அணுக்கமான உத்திபூர்வ பங்காளித்துவத்தைக் கொண்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டது.
“இத்தகைய சிறந்த உறவைக் கருத்தில்கொண்டு, சிங்கப்பூரின் உணவுப் பாதுகாப்பு தேவைகளைச் சமாளிக்க ஏதுவாக, அந்நாட்டிற்கு அரிசி ஏற்றுமதி செய்ய அனுமதிப்பது என இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதன் தொடர்பில் முறையான உத்தரவுகள் விரைவில் வெளியிடப்படும்,” என்று அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் பாசுமதி தவிர்த்த மற்ற வகை அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்தது.
இந்நிலையில், அக்டோபர் 15ஆம் தேதி வரை புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கும் 20 விழுக்காடு வரி விதிப்பதாகக் கடந்த வெள்ளிக்கிழமை இந்தியா அறிவித்தது.
உலக அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 40 விழுக்காட்டிற்கும் மேலாக இருந்து வருகிறது.
இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்துவரும் நிலையில் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரிசி ஏற்றுமதிக்கு அந்நாட்டு அரசு தடைவிதித்ததாகக் கூறப்படுகிறது.
சிங்கப்பூர் மகிழ்ச்சி
சிங்கப்பூருக்கு அரசி ஏற்றுமதியை அனுமதிக்கும் இந்தியாவின் முடிவு சிங்கப்பூர் மக்களுக்கும் கடைக்காரர்களுக்கும் பெருமகிழ்வையும் நிம்மதியையும் அளித்துள்ளது.
“அரிசி ஏற்றுமதித் தடையால் விலையேறியது. வரி விதிப்பால் விலை இன்னும் உயர்வதோடு, தட்டுப்பாடும் ஏற்படுமென நினைத்தோம். ஆனால், பெரும் பாதிப்பு ஏற்படுவதற்கு முன் தடை விலகியது நிம்மதியளிக்கிறது. விலை குறையுமா என்பது தெரிய இரு வாரங்கள் ஆகலாம். கடைகளில் கையிருப்பு இருப்பதாகத் தெரிகிறது,” என்று கூறினார் மொத்த வணிக விற்பனையாளரான திரு அன்பழகன், 42.
லிட்டில் இந்தியாவில் உள்ள கடை உரிமையாளரான திரு சின்னதுரை, 27, “பழைய கையிருப்பை விற்பனை செய்கிறோம். மேலும், மக்கள் ஏற்கெனவே அரிசி வாங்கி வைத்துள்ளதால் விற்பனையும் அதிகம் இல்லை. குறைந்தது ஒரு மாதத்திற்குப் பிறகே விலை மாற்றங்கள் தெரியவரும்,” என்றார்.
“அரிசி ஏற்றுமதி தடையினால் அரிசிக்குப் பெருமளவு தட்டுப்பாடு ஏற்படவில்லை என்றாலும், விலையில் அதிக வித்தியாசம் இருந்தது.
“உடனடியாக உணவின் விலையை ஏற்றுவது கடினம் என்பதால் எங்களுக்குச் செலவு கூடியது,” என்றார் சந்திர மஹால் உணவக உரிமையாளர் பெருமாள் அருமைச்சந்திரன், 48.
ஏற்றுமதித் தடைக்கு விலக்கு அளிக்கப்படுவதன் பலனாக அரிசி விலை குறையும் என்று கடைக்காரர்களும் மொத்த விற்பனையாளர்களும் எதிர்பார்க்கிறார்கள்.