புதுடெல்லி: வெங்காயங்களை ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்ட வரியை இந்தியாவின் மத்திய அரசாங்கம், சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் 40லிருந்து 20 விழுக்காட்டுக்குக் குறைத்தது.
அரசின் இந்த முடிவால் விவசாயிகளுக்கு வெங்காயத்திற்கு நல்ல விலை கிடைத்ததுடன் வெங்காய ஏற்றுமதியும் அதிகரித்தது. இந்நிலையில் ரபி பயிர் வரத்து அதிகரித்துள்ளதால், பல மாநிலங்களில் வெங்காய விலை சரிந்துள்ளது. அதனால், விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் வெங்காயத்தின் மீதான 20 விழுக்காடு ஏற்றுமதி வரியைத் திரும்பப்பெறுவதாக மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, வெங்காய விலை தேசிய சராசரியில் 39 விழுக்காடும் சில்லறை வர்த்தக விலையில் 10 விழுக்காடும் குறைந்துள்ளதால் இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாக மத்திய அரசாங்கம் அறிவித்ததாக தினமலர் தெரிவித்தது. ஏற்றுமதி வரி ரத்து, வரும் ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி அமலுக்கு வரும் என்றும் அரசாங்கம் குறிப்பிட்டது.
வெங்காய ஏற்றுமதி வரி ரத்து தொடர்பான அறிவிப்பை இந்தியா வருவாய்த்துறை வெளியிட்டது.
வாடிக்கையாளர்களுக்குக் கட்டுப்படியான விலையில் வெங்காயம் கிடைக்கவேண்டும், அதேவேளை விவசாயிகளுக்கு நியாயமான விலையில் இருக்கவேண்டும்; இரண்டுக்கும் ஏற்ற வகையில் விலையை வைத்திருக்கத் தாங்கள் கடமைப்பட்டுள்ளதால் இந்நடவடிக்கையை எடுத்திருப்பதாக மத்திய அரசாங்கம் விவரித்தது.