புதுடெல்லி: ரூ.63,000 கோடி மதிப்பிலான 26 ரஃபேல் கடற்படை போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும் பிரான்சும் திங்கட்கிழமை (ஏப்ரல் 28) கையெழுத்திட்டன.
இந்த விமானங்கள் ஐஎன்எஸ் விக்ராந்த், ஐஎன்எஸ் விக்ரமாதித்யா விமானம் தாங்கிக் கப்பல்களில் நிறுத்தப்படும்.
தலைநகர் டெல்லியில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத் தலைமையகத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது என்று இந்தியக் கடற்படை தெரிவித்துள்ளது.
இந்தியா தரப்பில் பாதுகாப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங், கடற்படை துணைத் தலைவர் வைஸ் அட்மிரல் கே. சுவாமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஐஎன்எஸ் விக்ராந்த், ஐஎன்எஸ் விக்ரமாதித்யா ஆகிய விமானம் தாங்கிக் கப்பல்கள் இந்தியாவிடம் உள்ளன. வானில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மேம்பட்ட ஜெட் விமானங்கள், இந்தியப் பெருங்கடலில் உள்ள அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடி, இந்தியாவின் கடல்சார் சக்தியை வலுப்படுத்தும்.
உலகிலேயே ரஃபேல்-எம் மிகவும் திறமையான போர் விமானங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மேலும் இது தற்போது பிரெஞ்சு கடற்படையால் மட்டுமே இயக்கப்படுகிறது.
ரபேஃல் ஒப்பந்தத்தில் 22 ஒற்றை இருக்கை ரஃபேல்-எம் ஜெட் விமானங்களும் நான்கு இரட்டை இருக்கை பயிற்சி விமானங்களும் அடங்கும்.
பிரான்சிடம் இருந்து இந்த விமானங்களை 2031ஆம் ஆண்டுக்குள் சிறு சிறு எண்ணிக்கையில் இந்தியா வாங்கும்.
தொடர்புடைய செய்திகள்
இப்போதைய ஒப்பந்தத்தில் பாதுகாப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் இந்திய தரப்பை பிரதிநிதித்தார்.
அதே நேரத்தில் பிரான்ஸ், இந்தியப் பாதுகாப்பு அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.
தற்போதுள்ள மிக்-29K போர் விமானங்கள் பராமரிப்பு தொடர்பான சிக்கல்கள் காரணமாக எதிர்பார்த்த அளவுக்குச் செயல்படவில்லை என்று கூறப்படுவதால், அவை சிறிது சிறிதாக சேவையில் இருந்து நிறுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
ரஃபேல் எம் ஜெட்கள் இந்திய தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் INS விக்ராந்தில் ஒருங்கிணைக்கப்படும்.
புதிய ஒப்பந்தம் இந்தியாவில் உள்ள ரஃபேல் ஜெட்களின் மொத்த எண்ணிக்கையை 62 ஆக உயர்த்தும்.

