இந்தியாவில் அறுவை சிகிச்சை மூலம் நடக்கும் பிரசவங்களின் விகிதம் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவதாகத் தேசியக் குடும்பச் சுகாதாரக் கணக்கெடுப்புப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, 2023-24ஆம் நிதியாண்டில் தனியார் மருத்துவமனைகளில் நடந்த பிரசவங்களில் பாதிக்கும் மேலாக, அதாவது 54 விழுக்காடு அறுவை சிகிச்சைகள் மூலம் நடந்துள்ளன.
மாநில வாரியாகப் பார்க்கும்போது, மேற்கு வங்கத்தில் மிக அதிகபட்சமாக 87.7 விழுக்காடும் ஜம்மு காஷ்மீரில் 90 விழுக்காடும் தனியார் மருத்துவமனைப் பிரசவங்கள் அறுவை சிகிச்சை முறையில் நடக்கின்றன.
தென்னிந்திய அரசு மருத்துவமனைகளிலும் இந்த விகிதம் அதிகமாகவே உள்ளது. தெலுங்கானாவில் 48 விழுக்காடாகவும் தமிழ்நாடு, கேரளாவில் 39 விழுக்காட்டிற்கு மேலாகவும் அது பதிவாகியுள்ளது.
எனினும், பீகார் (13 விழுக்காடு), ஜார்க்கண்ட் மாநிலங்களில் அதன் ஒட்டுமொத்த விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளது.
10 முதல் 15 விழுக்காடு அறுவை சிகிச்சைப் பிரசவ விகிதத்தையே ஏற்புடையதாக உலகச் சுகாதார நிறுவனம் கருதுகிறது.
ஆனால், இங்கிலாந்தில் 45 விழுக்காடாகவும் பிரேசிலில் 52 விழுக்காடாகவும் இது மிக அதிகமாக உள்ளது.
அதே வேளையில், தேவையற்ற அறுவை சிகிச்சைகளைக் குறைப்பதில் தனிக்கவனம் செலுத்தும் நார்வேயில் 16 விழுக்காடாகவும் ஸ்வீடனில் 19 விழுக்காடாகவும் இந்த விகிதம் பதிவாகியுள்ளது.


