புதுடெல்லி: சீனாவுடன் தொடர்புடைய நான்கு மின்சாதன உற்பத்தி நிறுவனங்கள் நாட்டின் முக்கிய மின் திட்டங்களுக்கான அரசாங்க ஏலங்களில் பங்கேற்க இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்று அதிகாரபூர்வ உத்தரவு ஒன்று தெரிவித்துள்ளது.
அதன்படி, ‘டிபிஇஏ எனர்ஜி’ , ‘நாஞ்சிங் எலக்ட்ரிக் இந்தியா’, ‘நியூ நார்த்ஈஸ்ட் எலக்ட்ரிக் இந்தியா’ மற்றும் ‘தைகாய் எலக்ட்ரிக் இந்தியா’ ஆகிய நான்கு நிறுவனங்கள் இந்த ஏலங்களில் பங்கேற்க அனுமதிக்கப்படும் என்று ஜூன் மாதம் 24ஆம் தேதியிட்ட இந்திய நிதி அமைச்சின் உத்தரவு ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் உற்பத்திப் பிரிவுகளைக் கொண்டுள்ள, முக்கியமான மின் திட்டங்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு இந்த விதிவிலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று இந்திய மின்சாரத் துறை அமைச்சு கடந்த ஜனவரி மாதம் கோரிக்கை விடுத்திருந்தது.
2020ஆம் ஆண்டு ஏற்பட்ட எல்லை மோதலுக்குப் பிறகு, சீன ஏலதாரர்கள் இந்திய அரசுக்குச் சொந்தமான ஏதேனும் ஒப்பந்தங்களுக்குப் போட்டியிடுவதற்கு முன், அரசாங்கக் குழுவிடம் பதிவு செய்து, அரசியல் மற்றும் பாதுகாப்பு அனுமதிகளைப் பெறுவதை இந்தியா கட்டாயமாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் அதிகரித்து வரும் மின்சாரத் தேவை மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சேர்க்கை ஆகியவற்றுக்கு ஆதரவாக, இந்தியா தனது மின் விநியோகக் கட்டமைப்பை வேகமாக விரிவுபடுத்தி வரும் சூழலில் இந்த விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிறப்பு அனுமதி, ஆணை வெளியிடப்பட்ட தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும் என்றும் இது மற்ற நிறுவனங்களுக்கான முன்னுதாரணமாகக் கருதப்படக் கூடாது என்றும் அந்த உத்தரவில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

