சென்னை: புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 450 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்க இந்தியா முன்வந்துள்ளது.
அண்மையில் வீசிய ‘டித்வா’ புயலால் இலங்கை கடும் சேதங்களை எதிர்கொண்டது. அங்கு கடும் வெள்ளம், நிலச்சரிவு காரணமாக 300க்கும் அதிகமானோர் உயிரிழந்துவிட்டனர்.
முதற்கட்டமாக, இந்தியா பல்வேறு நிவாரணப் பொருள்களை வழங்கியதுடன் மீட்புக் குழுவினரையும் அனுப்பி வைத்தது.
இந்நிலையில், புயல், வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அங்கு அந்நாட்டு வெளியுறவு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்திய அவர், பின்னர் இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்கேவையும் சந்தித்தார்.
இதையடுத்து கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்சங்கர், இலங்கைக்கு இந்தியா அளிக்கும் தொகையில் 350 மில்லியன் டாலர் சலுகைகளுடன் கூடிய கடன் என்றும் 100 மில்லியன் டாலர் மானியம் என்றும் தெரிவித்தார்.
இந்த நிதியைக் கொண்டு இலங்கையின் பல்வேறு பகுதிகளில் சேதம் அடைந்துள்ள சாலை, ரயில் பாலங்கள் சரிசெய்யப்படும் என்று குறிப்பிட்ட அவர், பொருளியல் நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் நிலையில் இந்த இயற்கைப் பேரிடர் இலங்கைக்கு புதிய சிரமங்களை உருவாக்கி உள்ளது என்றார்.

