புதுடெல்லி: ஸ்பெயினிடம் இருந்து இந்திய ராணுவம் C-295 போக்குவரத்து விமானத்தை சனிக்கிழமை ( ஆகஸ்ட் 2) முறைப்படிப் பெற்றுள்ளது.
இந்திய ராணுவத்தில் உள்ள ஆவ்ரோ (Avro) என்ற பழைய விமானத்தை மாற்றி நவீன தொழில்நுட்பத்தை கொண்ட ஏர்பஸ் விமானத்தை இந்தியா பெற்றுள்ளது. இந்த விமானம் 5 முதல் 10 டன் எடைகளுடன் பறக்கும் திறன் கொண்டது.
ஸ்பெயினில் உள்ள இந்தியத் தூதர் தினேஷ் கே. பட்னாயக் மற்றும் மூத்த விமானப்படை அதிகாரிகள் விமானத்தை அதிகாரபூர்வமாகப் பெற்றுக்கொண்டனர். மொத்தம் 16 விமானங்களில் இதுதான் கடைசி விமானம் ஆகும்.
திட்டமிட்டதைவிட இரண்டு மாதங்கள் முன்னதாகவே இந்த விமானம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்துவதில் ஒரு முக்கியமான மைல்கல்லாக இந்த விமானங்கள் விளங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய இந்த விமானம், தொடர்ந்து 11 மணி நேரம் பறக்கும் திறன் கொண்டது. செப்டம்பர் 2021இல், இந்திய விமானப்படைக்காக 56 C-295MW போக்குவரத்து விமானங்களை வாங்குவதற்காக ஒப்பந்தம் கையெழுத்தானது. 16 ஏர்பஸ் விமானங்கள் தயாரித்து ஸ்பெயின் மூலம் இந்தியாவிடம் ஒப்படைக்கவும் 40 இந்தியாவிலேயே தயாரிக்கவும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.