புதுடெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பாலஸ்தீனர்களுக்கும் காஸாவுக்கான அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் அமைதித் திட்டத்திற்குமான இந்தியாவின் தொடர் ஆதரவை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
அரபு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை இரண்டாவது முறையாகப் புதுடெல்லியில் திரு மோடி சந்தித்துப் பேசினார்.
வட்டார அமைதியையும் நிலைத்தன்மையையும் உறுதிசெய்ய அரபு நாடுகள் மேற்கொள்ளும் முயற்சிகளையும் திரு மோடி பாராட்டியதாகப் பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டது.
இந்திய மக்களுக்கும் அரபு நாட்டு மக்களுக்கும் இடையிலான பந்தம் ஆழமானது என்றும் வரலாற்றுபூர்வமானது என்றும் திரு மோடி கூறினார்.
அரபு நாடுகளுடனான உறவை வலுப்படுத்துவதற்கு இந்தியா கொண்டுள்ள கடப்பாட்டை முன்னிட்டு இந்திய- அரபு பங்காளித்துவம் குறித்த எதிர்கால திட்டங்களைப் பிரதமர் மோடி கலந்துரையாடலின்போது முன்வைத்தார்.
இந்தியாவும் அரபு நாடுகளும் வலுவான பந்தத்தையும் அமைதியை நாட்டுவதற்கான உறுதியையும் கொண்டுள்ளதாகத் திரு மோடி, தொழில்நுட்பம், எரிசக்தி, வர்த்தகம், புத்தாக்கம் ஆகிய துறைகளில் புதிய பாதைகளை அமைப்பதன் வழி புதிய உச்சங்களைத் தொட முடியும் என்றார் அவர்.
காஸா போர் தொடங்கி அனைத்துலக பூசல்களைக் களைவதற்காக உருவாக்கப்பட்ட ‘அமைதிக் குழு’ திட்டத்தில் சேருவதற்கான அழைப்பை இந்தியா இன்னும் ஏற்கவில்லை. இருப்பினும், திரு மோடி, காஸா அமைதித் திட்டத்துக்கான ஆதரவை வெளிப்படுத்தினார்.
அமைதிக் குழுவில் இணையும்படி திரு மோடிக்கு திரு டிரம்ப் கடிதம் அனுப்பியதைத் திரு மோடி பகிர்ந்துகொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
காஸாவில் அமல்படுத்தப்பட்ட அமைதி உடன்பாட்டின் இரண்டாம் கட்டத்தை முன்னிட்டு திரு டிரம்ப் அமைதிக் குழுவை அறிவித்தார். அந்தக் குழுவுக்குத் திரு டிரம்ப் தலைமை தாங்கு[Ϟ]வார்.
குழுவில் இணையும் உறுப்பு நாடுகள் குறைந்தபட்சம் மூவாண்டுத் தவணைக் காலத்துக்கு அதில் அங்கம் வகிப்பர். குழுவில் நிரந்தர உறுப்பு நாடாக இருக்க ஒவ்வொரு நாடும் $1 பில்லியன் நிதி செலுத்தவேண்டும்.

