புதுடெல்லி: இந்தியாவின் எல்லையோர மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தைத் ‘தன்னுடைய ஒருங்கிணைந்த பகுதி’ என்று சீனா பலகாலமாகவே சொந்தம் கொண்டாடி வருகிறது.
இந்நிலையில், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஊர்கள், மலைகளுக்கு சீன மொழிப் பெயர்களை சீன அரசு சூட்டியுள்ளது. இதுதொடர்பான 4ஆவது பட்டியலை சீனா வெளியிட்டதால் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது. அதன்படி, அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள 30 இடங்களுக்குச் சீனா புதுப்பெயர் சூட்டியுள்ளது.
இந்நிலையில், ““அருணாச்சல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் அங்கம்தான்,” என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
“உங்கள் வீட்டிற்கு நான் பெயர் சூட்டினால், அது என்னுடையதாகிவிடுமா? பெயரை மாற்றுவதால் எந்த மாற்றமும் நிகழாது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே ராணுவம் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் உள்ளது,” என்று திரு ஜெய்சங்கர் கூறினார்.
இதனிடையே, சீனாவிற்குத் தக்க பதிலடி கொடுப்பதை இந்தியா உறுதிசெய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்தியப் பகுதிகளை ஆக்கிரமிக்கும் சீனாவின் செயலுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் பேச்சுவார்த்தையால் தீர்வுகாண முடியவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.