புதுடெல்லி: இந்திய விமானப் போக்குவரத்துத் துறை வரலாற்றில் முதன்முறையாக இந்திய விமானம் செயற்கைக்கோள் உதவியுடன் வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.
இதற்காக செயற்கைக்கோள் வழி செலுத்தல் அமைப்பான ‘ககன்’ (GAGAN-GPS Aided GEO Augmented Navigation) என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.
இதுவரை சிறிய ரக விமானங்கள் மட்டுமே இத்தொழில்நுட்ப உதவியோடு சோதிக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் அதிக பயணிகளைச் சுமந்து செல்லும் இண்டிகோ நிறுவனத்தின் ‘ஏர்பஸ்-320’ பயணிகள் ஜெட் விமானம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூரில் ‘ககன்’ தொழில்நுட்பத்தின் உதவியோடு வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டது.
இந்தியாவில் பயணிகளின் விமானம் ஒன்று இவ்வாறு தரையிறக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.
இனி இந்தியாவில் எவ்வளவு மோசமான வானிலை நிலவினாலும்கூட பயணிகளுக்கான ஜெட் விமானங்களை பாதுகாப்பாகவும் எளிதாகவும் தரையிறக்க முடியும்.
வழக்கமாக விமான நிலையங்களில் உள்ள ஓடுபாதைக்கு அருகே தரையில் அமைக்கப்பட்டிருக்கும் ரேடியோ அலைவரிசை கருவிகளின் உதவியுடன்தான் விமானங்கள் தரையிறக்கப்படும்.
இந்நிலையில், ‘ககன்’ செயற்கைக்கோளின் துல்லியமான வழிகாட்டுதலுடன் இண்டிகோ விமானம் தரையிறங்கியது.
இந்திய விமான நிலையங்கள் ஆணையமும் இஸ்ரோவும் இணைந்து ‘ககன்’ செயற்கைக்கோள் அமைப்பை உருவாக்கின.
‘சிபிஎஸ்இ’ சமிக்ஞைகளில் ஏற்படும் வலி மண்டல குளறுபடிகளைச் சரிசெய்து, விமானிகளுக்கு பத்து மடங்கு துல்லியமான, கூடுதல் தகவல்களை அளித்து பாதுகாப்பான ஓடுபாதையைக் காட்டுவதே ‘ககன்’ அமைப்பின் சிறப்பம்சம்.
அண்மைய சாதனையின் மூலம் செயற்கைக்கோள் அடிப்படையிலான, துல்லியமாகத் தரையிறங்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள சில மேலை நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்தது.

