புதுடெல்லி: சீனா, பங்ளாதேஷ், மியன்மார், பூட்டான் அருகேயுள்ள தனித்தனியான பகுதிகளை இணைக்கும் வகையில் சீன எல்லை அருகே 500 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரயில் பாதை அமைப்பதற்கு இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தச் செய்தியை வர்த்தகச் செய்திகளை வெளியிடும் புளூம்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அரசு ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் செலவு செய்து, 9,984 கிலோ மீட்டர் தூரத்திற்கு நெடுஞ்சாலை அமைத்துள்ளது. தற்போது கூடுதலாக 5,055 கிலோ மீட்டர் தூரத்துக்குச் சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சீன எல்லை அருகே கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் மூலம் மக்கள் போக்குவரத்து அதிகரிக்கும். நெருக்கடியான நேரங்களில் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உதவும் என இந்திய அரசாங்கம் நினைக்கிறது.
டோக்லாம் அருகே எல்லையை ஒட்டி 1,450 கிலோ மீட்டர் தூரத்துக்குப் புதிய சாலைகள் அமைத்து முக்கிய பகுதிகளில் இணைப்பை ஏற்படுத்தும்படி பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். வடகிழக்குப் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் 1,700 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
எல்லைப் பகுதிகளில் ராணுவப் படைகள் வேகமாகச் சென்றடைய இந்த வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.