வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தலைமையிலான புதிய அரசு, அந்நாட்டு வரவுசெலவைக் குறைக்கும் நோக்கில் இந்தியா, பங்ளாதேஷ் உள்ளிட்ட பல நாடுகளுக்கான கோடிக்கணக்கான டாலர் நிதியை ரத்து செய்துள்ளது.
இந்திய தேர்தல்களில் வாக்காளர்கள் வாக்களிக்கும் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட 21 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய திட்டத்தையும் வங்காளதேசத்தின் அரசியல் நிலைத்தன்மையை வலுப்படுத்தும் நோக்கில் 29 மில்லியன் டாலர் செலவில் மேற்கொள்ளபடும் நடவடிக்கையும் நிறுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக எலான் மஸ்க்கின் அரசாங்க செயல்திறன் துறை பிப்ரவரி 16ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அத்துறை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், மெரிக்க வரி செலுத்துவோரின் நிதி இத்திட்டங்களுக்கு செலவிடப்படவிருந்ததாகவும் அதனால் அவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
இந்தியா, பங்ளாதேஷ் மட்டுமின்றி நிதியுதவி ரத்து செய்யப்படும் பிற நாடுகள், ரத்து செய்யப்பட்ட நிதி தொடர்பான முழு விவரங்களையும் அந்தப் பதிவில் அத்துறை வழங்கியுள்ளது.
அண்மையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து பேசினார். அப்போது அமெரிக்க-இந்தியா உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை இருவரும் வெளியிட்டனர்.
அந்நிகழ்வுகள் நடந்த சில நாள்களுக்குப் பிறகு, இந்த நிதி ரத்து தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜகவின் பேச்சாளர் அமித் மல்வியா, தற்போது ரத்து செய்யப்பட்ட நிதியுதவியை இந்தியாவின் தேர்தல் செயல்பாட்டில் அந்நியத் தலையீடு எனச் சாடியுள்ளார்.
“வாக்காளர்களின் வாக்குப்பதிவு எண்ணிக்கையை அதிகரிக்க $21 மில்லியன் அமெரிக்க டாலரா? இது நிச்சயமாக இந்தியாவின் தேர்தல் செயல்பாட்டில் வெளிப்புற தலையீடு. இதனால் யாருக்கு லாபம்? நிச்சயமாக ஆளும் கட்சிக்கு இல்லை!” என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.