புதுடெல்லி: இந்தியாவில் உள்ள குழந்தைகள் பரிந்துரைக்கப்பட்ட வரம்பைவிட, கைப்பேசியில் கூடுதல் நேரத்தைச் செலவிடுவது அண்மைய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இதற்காக, நாடு முழுவதும் 2,857 குழந்தைகளை உள்ளடக்கிய 10 ஆய்வுகளின் முடிவுகள் தொகுக்கப்பட்டன. இவற்றை சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த ஆசிஷ் கோப்ரகடே, எம்.ஸ்வாதி ஷெனாய் ஆகிய இருவரும் மெட்டா பகுப்பாய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவுகள் ‘கியூரியஸ்’ என்ற இதழில் வெளியாகியுள்ளது.
5 வயதுக்குட்பட்ட இந்தியக் குழந்தைகள் கைப்பேசி, மடிக்கணினி அல்லது தொலைக்காட்சி முன்னால் அதிகபட்சம் 1.2 மணி நேரம் செலவிடலாம் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்தியக் குழந்தைகளோ, சராசரியாக 2.2 மணி நேரம், அதாவது கிட்டத்தட்ட 2 மடங்கு செலவிடுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து அல்லது அவ்வப்போது திரையைப் பார்ப்பதால் சிறார்களின் மொழி வளர்ச்சி பாதிக்கப்படுவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், அறிவாற்றல் செயல்பாடு குறைதல், சமூகத் திறன் வளர்ச்சி தடைபடுதல் ஆகியவற்றுக்கும், திரையைத் தொடர்ந்து பார்ப்பதற்கும் நேரடித் தொடர்பு உள்ளது என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், உடல் பருமன், தொந்தரவுடன் கூடிய தூக்கம், கவனக்குறைவு பிரச்சினைகள் ஆகியவற்றுக்கான அபாயமும் அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
“பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்கும்போது அல்லது குழந்தைகள் அழும்போது அவர்கள் தொலைக்காட்சி, கைப்பேசி பார்க்கச் செய்வதைத் தவிர்க்க வேண்டும். பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும். முதலில் அவர்கள் வீட்டில் திரை நேரத்தை குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்,” என்கிறார் குழந்தைகள் மருத்துவ நிபுணரும் பெலிக்ஸ் மருத்துவமனைகளின் தலைவருமான டி.கே.குப்தா.