கோலாலம்பூர்: யுபிஐ எனப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட தளத்தை உலகம் முழுவதும் விரிவுபடுத்த இந்தியா மேற்கொண்டுவரும் முயற்சியில் குறிப்பிடத்தக்க இரண்டு மாற்றங்கள் அண்மையில் நடந்துள்ளன.
மலேசியாவில் இந்தியச் சுற்றுப்பயணிகள் தங்களது யுபிஐ சேவையைப் பயன்படுத்த வகைசெய்யும் இந்த ஒப்பந்தத்தை, ‘ரேசர்பே கர்லெக்’ நிறுவனமும் என்பிசிஐ இன்டர்நேஷனல் பேமண்ட் லிமிட்டெட் நிறுவனமும் இணைந்து உறுதி செய்துள்ளன.
பணமாற்றத்தை மேலும் எளிதாக்கவும் அதற்கான கட்டணங்களை வெகுவாகக் குறைக்கவும் இந்த உடன்பாடு உதவும்.
இந்த விரிவாக்கத்தின்வழி மில்லியன்கணக்கான இந்தியச் சுற்றுப்பயணிகள், இந்தியாவில் பணமாற்றம் செய்யும்போது அனுபவிக்கும் செளகரியத்தை மலேசியாவிலும் இனி உணர முடியும் என்று என்பிசிஐ இன்டர்நேஷனல் பேமண்ட் லிமிட்டெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ரித்தேஷ் ஷக்லா தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக, 2023ல் இந்தியாவின் யுபிஐ, சிங்கப்பூரின் பேநவ் சேவையுடன் இணைக்கப்பட்டது. ஜப்பான், பூட்டான், ஐக்கிய அரபுச் சிற்றரசு, ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட பல உலக வட்டாரங்களில் இந்தச் சேவை பயன்படுத்தப்படுகிறது.
இதற்கிடையே நேபாளத்தின் கட்டண முறையுடன் யுபிஐ இணைக்கும் தொழில்நுட்ப ஒப்பந்தம், கொள்கை சார்ந்த வேறுபாடுகள் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது
அரசுரிமை, தரவுப் பாதுகாப்பு பற்றிய கவலைகள் உட்படத் தீர்க்கப்படாத சில பிரச்சினைகள் காரணமாகவே இந்தக் கூட்டு முயற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

