புதுடெல்லி: இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகச் சீனாவிலிருந்து மிகக் குறைந்த விலையில், அதிக அளவில் மை இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
இதனால், உள்நாட்டில் மை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பல இழப்புகளைச் சந்தித்து வருகின்றன.
இந்நிலையில், சமூக ஊடகமான ‘ரெட்டிட்’ பக்கத்தில் பெயர் குறிப்பிடாத நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் தகவல் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவு தொழில்துறை வட்டாரத்தில் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
அதில் அவர், “கடந்த 34 ஆண்டுகளாக இயங்கிவரும் எங்களது நிறுவனத்துக்கு மை தயாரிப்பதற்கான மூன்று ஆலைகள் உள்ளன.
“சீன இறக்குமதிகளுடன் ஒப்பிடுகையில், எங்களால் போட்டியிட முடிவதில்லை. இதனால், கடந்த மூன்று ஆண்டுகளாக எங்களது நிறுவனம் கடும் இழப்பைச் சந்தித்து வருகிறது. வேறு வழியின்றி இரண்டு ஆலைகளை மூட நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.
“இந்த கடினமான முடிவின் காரணமாக 1,934 நிரந்தரப் பணியாளர்கள், 896 ஒப்பந்தத் தொழிலாளர்கள் எனக் கிட்டத்தட்ட 2,800க்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர்.
“72 பேர் கொண்ட நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்பக் குழு எட்டுப் பேராகக் குறைக்கப்பட்டுள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை குறித்தும் வருத்தம் உள்ளது.
“ஊழியர்களுக்கு 3 முதல் 5 மாத ஊதியத்தை இழப்பீடாக வழங்காமல் நிர்வாகம் மிகக் குறைந்த தொகையை மட்டுமே அங்கீகரித்துள்ளது,” என்று விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால் பெரிதும் அதிருப்தி அடைந்த அந்த அதிகாரி, அந்நிறுவனத்திலிருந்து விலகி ஜெர்மனிக்குச் செல்ல முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

