புதுடெல்லி: இந்தியாவின் தற்காப்புத் தளவாட ஏற்றுமதி கடந்த 10 ஆண்டுகளில் 34 மடங்கு அதிகரித்து உள்ளதாக மத்திய தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
முன் எப்போதும் இல்லாத வகையில் தற்காப்புத்துறை வளர்ந்து வருவதாகவும் இதற்கு ‘தன்னிறைவு பெற்ற இந்தியா’ திட்டம் ஊக்கமளித்து வருவதாகவும் அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“ஏறக்குறைய 80 நாடுகளுக்கு இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வெடி மருந்துகள், ஆயுதங்கள் உள்ளிட்ட தற்காப்புத் தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
“2029ஆம் ஆண்டிற்குள் தளவாட ஏற்றுமதியை ரூ.50 ஆயிரம் கோடியாக உயர்த்த இந்திய அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது.
“இந்நிலையில், கடந்த 2013- 2014ஆம் நிதியாண்டில் ரூ.686 கோடியாக இருந்த தற்காப்புத் தளவாட ஏற்றுமதி 2024-2025ஆம் நிதியாண்டில் ரூ.23,622 கோடியாக அதிகரித்துள்ளது. இது 34 மடங்கு அதிகம் என,” அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய தற்காப்புத் தளவாடங்கள் மீதான நம்பகத்தன்மை அனைத்துலகச் சந்தையில் அதிகரித்துள்ளதாக துறைசார்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதை உறுதி செய்யும் விதமாக தற்காப்புத் தளவாட உற்பத்தி சார்ந்த பொதுத்துறை நிறுவனங்களின் லாபமும் அதிகரித்து உள்ளது.