புதுடெல்லி: தொடர் மழை, வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் இந்திய மருத்துவக்குழு 2,200க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளித்து வருகிறது. இத்தகவலை இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
இலங்கையில் கண்டி பகுதியில் தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்களுக்கு இந்திய மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்காக 70க்கும் மேற்பட்ட இந்திய மருத்துவப் பணியாளர்கள் கண்டியில் முகாமிட்டுள்ளனர்.
இலங்கைக்கு இந்தியா பல்வேறு வகையிலும் உதவி வருகிறது. வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு பல்வேறு நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மீட்புப்பணிகளில் உதவ இந்தியப் பேரிடர் மீட்புப்படையும் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் மனிதாபிமான உதவிகளின் ஒரு பகுதியாக, மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதார உதவிகளை வழங்கும் பொருட்டு ஒரு நடமாடும் மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டது.
இந்திய விமானப்படையின் C-17 என்ற விமானம் ஆக்ராவில் இருந்து மருத்துவப் பணியாளர்கள், கருவிகளுடன் அண்மையில் இலங்கைத் தலைநகர் கொழும்பு சென்றடைந்தது.
பின்னர் கண்டியில் இந்தியா அமைத்துள்ள தற்காலிக மருத்துவமனைக்கு இந்திய மருத்துவப் பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர் என இந்திய வெளியுறவு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

