தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆப்கானில் மீண்டும் இந்திய தூதரகம் திறக்கப்படும்: ஜெய்சங்கர் அறிவிப்பு

1 mins read
1ddafa60-f0e8-41be-abc4-e8e730fb9489
ஆப்கான் வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்தியப் பயணம் இருநாடுகளுக்கு இடையே உள்ள உறவை மேலும் வலுப்படுத்தும் என்றார் திரு ஜெய்சங்கர். - படம்: ஊடகம்

புதுடெல்லி: ஆப்கானிஸ்தானின் காபூலில் இந்தியா தனது தூதரகத்தை மீண்டும் திறக்கும் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2021ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானை தலிபான் அமைப்பு கைப்பற்றிய பிறகு இந்தியா அங்கிருந்த தனது தூதரகங்களை மூடியது.

இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமிர்கான் முட்டாகி, புதுடெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேசினார். அப்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக வெளியுறவு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு ஜெய்சங்கர், இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவின் புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளதாகக் குறிப்பிட்டார்.

“ஆப்கான் வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்தியப் பயணம் இருநாடுகளுக்கு இடையே உள்ள உறவை மேலும் வலுப்படுத்தும்.

“பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பூகம்பங்களின் போது நாங்கள் ஒருவருக்கொருவர் பேசுவதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, வட்டார ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்திற்கு இந்தியா முழுமையாக துணைநிற்கும்,” என்றார் திரு ஜெய்சங்கர்.

முன்னதாகப் பேசிய ஆப்கான் வெளியுறவு அமைச்சர், இந்தியாவை நெருங்கிய நண்பராக ஆப்கானிஸ்தான் பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.

“வர்த்தகம் மூலம் இருநாட்டு மக்களுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்த விரும்புகிறோம். ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து எந்த தீயசக்தியும் இந்தியாவிற்கு எதிராகச் செயல்பட அனுமதிக்க மாட்டோம்,” என்றார் திரு முட்டாகி.

குறிப்புச் சொற்கள்