ஜெய்ப்பூர்: இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஜாகுவார் போர் விமானம் ஒன்று புதன்கிழமை (ஜூலை 9) ராஜஸ்தான் மாநிலம், சூரு மாவட்டத்தில் விழுந்து நொறுங்கியது.
அம்மாவட்டத்தின் ரத்தன்கர் நகருக்கு அருகே இவ்விபத்து நேர்ந்தது. இதில் விமானத்தின் இரு விமானிகளும் மாண்டுபோனதாக இந்திய விமானப்படை தனது எக்ஸ் பக்கம் வழியாகத் தெரிவித்தது.
வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது விபத்து நேர்ந்ததாக அது குறிப்பிட்டது. இவ்விபத்தில் பொதுமக்களின் உடைமைகள் எதுவும் சேதமடையவில்லை.
விமானம் விழுந்து நொறுங்கியதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைக் குழு ஒன்றை இந்திய விமானப்படை அமைத்துள்ளது.
விபத்து குறித்த தகவல் அறிந்ததும் நிலைமையை மதிப்பிடவும் தேடல், மீட்புப் பணிகளில் ஈடுபடவும் காவல்துறைக் குழுக்கள் அவ்விடத்திற்கு விரைந்ததாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
“விபத்து நேர்ந்த இடத்திற்கு அருகே மனித உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன,” என்று கமலேஷ் என்ற காவல்துறை உயரதிகாரி தெரிவித்தார்.
மூன்றாவது விபத்து
இவ்வாண்டில் ஜாகுவார் விமானம் விபத்திற்குள்ளானது இது மூன்றாவது முறை என என்டிடிவி செய்தி தெரிவிக்கிறது.
கடந்த மார்ச் 7ஆம் தேதி ஹரியானா மாநிலம், பஞ்சகுலாவில் ஜாகுவார் விமானம் ஒன்று விபத்திற்குள்ளானது.
தொடர்புடைய செய்திகள்
அதன்பின் ஏப்ரலில் குஜராத் மாநிலம், ஜாம்நகர் விமானப்படை நிலையத்திற்கு அருகே வழக்கமான பயிற்சியின்போது ஜாகுவார் விமானம் விழுந்து நொறுங்கியது.
ஜாம்நகரிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் சுவர்தா எனும் சிற்றூருக்கு அருகிலுள்ள வயல்வெளியில் அவ்விமானம் விழுந்து நொறுங்கியது. அவ்விமானத்தில் இருந்த இரு விமானிகளில் ஒருவர் உயிரிழந்துவிட்டார்; இன்னொருவர் பாதுகாப்பாக வெளியேறிவிட்டார்.

