புதுடெல்லி: இந்திய அரசு புதிய செயற்கை நுண்ணறிவுச் சட்டத்தை இயற்றப் பரிசீலித்து வருவதாகத் தகவல் தொழில்நுட்பச் செயலாளர் எஸ் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
வளர்ந்துவரும் தொழில்நுட்பம், இணைய அச்சுறுத்தல்கள், வன்போலிக் காணொளிகள் குறித்த புதிய கவலைகள் எழுவதால் புதிய சட்டம் குறித்துப் பரிசீலிக்க வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்கள், செயற்கை நுண்ணறிவின் தொடக்கக் காலச் சவால்களைச் சமாளிக்க உதவினாலும் செயற்கை நுண்ணறிவு நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த ஒரு தனிச்சட்டம் தேவைப்படலாம் எனத் திரு கிருஷ்ணன் தெரிவித்தார்.
வன்போலிக் காணொளிகள், ஊழியர்கள் தொடர்பான பிரச்சினைகள் ஆகியவற்றை எதிர்கொள்ள இந்தியாவில் தற்போதைய சட்டக் கட்டமைப்பு கைகொடுக்கிறது.
எனினும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து, புதிய அச்சுறுத்தல்கள் எழும்போது அவற்றைச் சமாளிக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
“செயற்கை நுண்ணறிவு, இணையப் பாதுகாப்பு தொடர்பான சட்ட செயல்முறையும் விதிமுறைகளும் ஆரம்பகால கவலைகளுக்குத் தீர்வு கண்டாலும் அடுத்தகட்டமாக, ஆழமாகச் சிந்தித்து கூடுதல் விதிமுறைகளை உருவாக்க வேண்டியிருக்கலாம் என்பதைத் தற்போது உணர்கிறோம்,” என்று திரு கிருஷ்ணன் குறிப்பிட்டார்.
புதிய சட்டத்தை உருவாக்க வேண்டியதற்கான நேரம் நெருங்கி வருவதாக வெள்ளிக்கிழமை (ஜூலை 3) ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
‘விபிஎன்’ (VPN) - மெய்நிகர் தனியார் கட்டமைப்புச் சேவை வழங்கும் நிறுவனங்கள் இந்தியாவில் பதிவுசெய்ய மறுத்து, பிற நாடுகளிலிருந்து சேவைகளை வழங்கும் சிக்கலான பிரச்சினை இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
‘விபிஎன்’களைப் பதிவு செய்வதற்குத் தனி அமைப்பு உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இப்பிரச்சினைக்குத் தொழில்நுட்ப, சட்டரீதியான தீர்வுகள் என இரண்டையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

