புதுடெல்லி: அண்மையில் இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை தொடர்பாக, உலக நாடுகளுக்கு விளக்கம் அளிக்க இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய ஏழு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒரு குழு மலேசியா, சிங்கப்பூருக்கு புதன்கிழமை (மே 21) புறப்பட்டது.
மொத்தம் 33 நாடுகளுக்கு இந்தக் குழுக்கள் பயணம் மேற்கொள்கின்றன.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சின் செயலாளர் விக்ரம் மிஸ்ரி விவரித்துள்ளார்.
இந்திய எம்பிக்கள் குழுக்களுக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சசி தரூர், திமுகவின் கனிமொழி, பாஜக எம்பிக்கள் ரவி சங்கர் பிரசாத், பைஜெயந்த் பாண்டா, ஐக்கிய ஜனதா தள எம்பி சஞ்சய் குமார் ஜா, தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே, சிவசேனா எம்பி ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் தலைமை வகிப்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஐக்கிய ஜனதா தள எம்பி சஞ்சய் குமார் ஜா தலைமையிலான குழு இந்தோனீசியா, மலேசியா, தென் கொரியா, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு புதன்கிழமை (மே 21) புறப்பட்டது.
இந்தக் குழுவில் பாஜக எம்.பி.க்கள் சாரங்கி, பிரிஜ் லால், பிரசன் பராஜ், ஹேமங் ஜோஷி, மார்க்சிஸ்ட் எம்.பி ஜான் பிரிட்டாஸ், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழு முதலில் ஜப்பான் செல்லும் என்றும் அங்கு பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்கும் என்றும் விக்ரம் மிஸ்ரி கூறினார்.