புதுடெல்லி: கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு அன்றாடம் ரூ.1,700 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது.
அதைச் சமாளிக்க விலையை அதிகரிக்குமாறு எண்ணெய் நிறுவனங்கள் அரசாங்கத்துக்குக் கோரிக்கை விடுத்துள்ளன.
ஈரான் போரினால், ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதுடன் அந்தப் பகுதியில் செல்லும் சரக்குக் கப்பல்கள்மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் அப்பகுதியை அமெரிக்கப் போர்க் கப்பல்களும் முற்றுகையிட்டுள்ளன.
கச்சா எண்ணெய்ப் போக்குவரத்து எப்போது இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று தெரியாதநிலையில், உலக அளவில் பெட்ரோல், டீசல், எரிவாயு விலை 50 விழுக்காடுவரை உயர்ந்துள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகள், ஐரோப்பிய நாடுகளில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் உயர்த்தப்பட்டன. ஆனால், இந்தியாவில் அவற்றின் விலை உயர்த்தப்படவில்லை.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.94.77க்கும் டீசல் ரூ.87.67க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வீட்டு உபயோகச் சமையல் எரிவாயு உருளை விலை கடந்த மார்ச் மாதத்தில் ரூ.60 உயா்த்தப்பட்டது.
மேலும், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட அரசாங்கம் நிதி ஒதுக்கியது.
எனினும், எரிபொருள் விலையை உயர்த்தாததால், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு அன்றாடம் ரூ.1,600 கோடி முதல் ரூ.1,700 கோடி வரை நஷ்டம் ஏற்படுகிறது. கடந்த 10 வாரங்களில் ஏறத்தாழ ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
எண்ணெய் நிறுவனங்கள் கடும் நிதிச் சுமையை எதிர்கொண்டு வருவதால் பெட்ரோல், டீசல் விலையை அதிகரிப்பது தொடர்பாக இந்திய அரசு முடிவெடுக்கலாம் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

