லண்டன்: பிரிட்டனின் அதிவேகப் போர் விமானங்களை இயக்கும் விமானிகளுக்குப் பயிற்சி அளிக்க இந்திய விமானப்படையைச் சேர்ந்த பயிற்றுநர்கள் மூவர் பிரிட்டன் ராயல் விமானப்படையில் இணைந்துள்ளனர்.
இந்திய விமானப்படை வரலாற்றிலேயே அதன் பயிற்றுநர்கள் பிரிட்டனில் அந்நாட்டு அதிவேகப் போர் விமானங்களின் விமானிகளுக்குப் பயிற்சி அளிப்பது இதுவே முதல் முறையாகும்.
ஜெட் ரக விமானங்களை இயக்குவது குறித்து அம்மூவரும் பிரிட்டன் விமானிகளுக்குப் பயிற்சி அளிப்பார்கள்.
வேல்ஸில் உள்ள ராயல் ஏர் போர்ஸ் விமானப்படையில் இணைந்துள்ள இப்பயிற்றுநர்கள் ஈராண்டுகள் அங்குப் பணியாற்ற உள்ளனர்.
பிரிட்டன் தளபதிகளின்கீழ் பணியாற்றினாலும், இவர்கள் தொடர்ந்து இந்திய விமானப்படையின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ்தான் செயல்படுவார்கள்.
இதன்மூலம் பிரிட்டனின் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய மூன்று ராணுவக் கல்விக் கழகங்களிலும் இந்திய அதிகாரிகள் பயிற்றுநர்களாகப் பணியாற்றும் பெருமை பெற்றுள்ளனர்.
இது குறித்து இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவில் தகுதிபெற்ற பயிற்றுநர்கள் மூவர் ராயல் விமானப்படையில் இணைந்துள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்க பணி,” எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், “இந்தியா–பிரிட்டன் இடையிலான தற்காப்பு உறவுகளை தொடர்ந்து மேன்மேலும் வலுப்படுத்துவதில் இது ஒரு முக்கிய மைல்கல் ஆகும்,” என்றும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

