மும்பை: இந்திய ரிசர்வ் வங்கிக்கு (RBI) விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் குறித்து விசாரித்து வருவதாக மும்பை காவல் நிலைய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 13) கூறியுள்ளனர்.
வங்கியின் அதிகாரத்துவ இணையத்தளத்துக்கு டிசம்பர் 12 நண்பகலில் அனுப்பப்பட்ட அந்த மின்னஞ்சல் ரஷ்ய மொழியில் எழுதப்பட்டிருந்தது. டிசம்பர் மாதத்தில் இரண்டாவது முறையாக ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக மும்பை காவல்துறை அதிகாரி கூறினார்.
முன்னதாக நவம்பர் 16ஆம் தேதி, ரிசர்வ் வங்கியின் வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அழைத்தவர் “லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமை நிர்வாக அதிகாரி” என்று தன்னைக் கூறிக்கொண்டதாகவும் மிரட்டல் விடுப்பதற்கு முன் ஒரு பாடலைப் பாடியதாகவும் கூறப்படுகிறது.
2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி மும்பையில் சத்திரபதி சிவாஜி ரயில் நிலையம், தாஜ் ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 175 பேர் வரை உயிரிழந்தனர், 300 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
இதற்கிடையே, டெல்லியில் உள்ள ஆறு பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை காலை (டிசம்பர் 13) மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, அப்பள்ளிகளில் தீயணைப்புப் படை, காவல்துறை, வெடிகுண்டு கண்டறியும் குழுவினர் மோப்ப நாய்களுடன் சோதனை நடத்தினர்.
தீவிர சோதனைக்குப் பிறகு, சந்தேகத்திற்கிடமான பொருள்கள் எதுவும் கிடைக்கவில்லை என அதிகாரிகள் உறுதி செய்தனர்.
திங்கட்கிழமை காலை, குறைந்தது 40 டெல்லி பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. அதை அனுப்பியவர், பள்ளிக் கட்டடங்களுக்குள் வெடிகுண்டு வெடிப்பதைத் தடுக்க $30,000 தொகையைக் கோரினார்.
தொடர்புடைய செய்திகள்
மிரட்டலைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் அவை வெறும் புரளி என்பது தெரியவந்தது.
தொடரும் மிரட்டல்
இந்தியாவில் உள்ள பள்ளிகள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், விமான நிறுவனங்களுக்கு இந்த ஆண்டு நூற்றுக்கணக்கான வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. அவை புரளிகள் என்பது பின்னர் தெரியவந்தது.
இந்தியாவில் உள்ள விமான நிறுவனங்கள், விமான நிலையங்களுக்கு இந்த ஆண்டு நவம்பர்வரை கிட்டத்தட்ட 1,000 போலி மிரட்டல்கள் வந்துள்ளன. இது 2023ஆம் ஆண்டைவிட கிட்டத்தட்ட பத்து மடங்கு அதிகம்.

