புதுடெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் சனிக்கிழமையன்று (மார்ச் 21) தொலைபேசி வாயிலாக உரையாடினார்.
ஈரான் அதிபருக்கு நோன்புப் பெருநாள், பாரசீக புத்தாண்டான நவ்ரூஸ் திருநாளுக்காகத் தமது மனமார்ந்த வாழ்த்துகளை இந்தியப் பிரதமர் தெரிவித்தார்.
இந்தப் பண்டிகைக் காலம் மேற்கு ஆசியாவில் அமைதி, நிலைத்தன்மை, செழிப்பு ஆகியவற்றைக் கொண்டு வரட்டும் எனத் தம்முடைய விருப்பத்தைத் திரு பெசெஷ்கியிடம் தெரிவித்ததாக மோடி கூறினார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், மத்தியக் கிழக்குப் பகுதிகளில் உள்ள முக்கியமான உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது உலகளாவிய விநியோகச் சங்கிலியைப் பாதிப்பதாகக் கூறிய அவர், அனைத்துலக வர்த்தகத்திற்கு முக்கியமாக விளங்கும் கடல்வழிப் பாதைகள் பாதுகாப்பாகவும் தடையின்றியும் இருப்பதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை ஈரான் அதிபர் உடனான உரையாடலின்போது வலியுறுத்தியதாக அவர் சொன்னார்.
மேலும், ஈரானில் வசிக்கும் இந்தியக் குடிமக்களின் பாதுகாப்பு, நலனை உறுதி செய்வதில் ஈரான் அரசு தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்கு நன்றி தெரிவித்துக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.


