புதுடெல்லி: வனவிலங்குகள் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பதைத் தடுக்கும் வகையில், இந்திய அரசு செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உள்ளது.
இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் யானைகளும் பிற வனவிலங்குகளும் தண்டவாளங்களைக் கடக்கும்போது ரயில் மோதி இறப்பது வாடிக்கையாகிவிட்டது.
இதையடுத்து, இத்தகைய உயிரிழப்புகளைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வனவிலங்குகளைப் பாதுகாக்க இந்தியன் ரயில்வே செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அடிப்படையிலான அமைப்பை வலுப்படுத்தி உள்ளது.
யானைகள், சிங்கங்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் தண்டவாளங்களைக் கடக்கும்போது அல்லது தண்டவாளங்களில் நடந்து செல்லும்போது அவற்றைக் காக்கும் வகையில் ரயில் ஓட்டுநருக்கு முன்கூட்டியே ‘ஏஐ’ அமைப்பு மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுவிடும்.
இதற்காக ‘ஏஐ’ தொழில்நுட்பம் உள்ள கேமராக்களை ரயில்வே நிர்வாகம் பல்வேறு இடங்களில் அதிக எண்ணிக்கையில் நிறுவியுள்ளது.
யானைகள் ரயில் மோதி இறப்பதைத் தவிர்க்க, வடகிழக்கு எல்லைப் பகுதிகளில் 141 வழித்தட கிலோ மீட்டரில் இந்த ‘ஏஐ’ அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது.
யானைகள் தண்டவாளத்துக்கு அருகே இருக்கும்போது அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்பே ரயில் ஓட்டுநர் ரயில் நிலைய மேலாளர்கள், கட்டுப்பாட்டு அறைகளுக்கு ஏஐ நிகழ் நேர எச்சரிக்கை குறிப்புகளை அனுப்பிவிடும்.
தொடர்புடைய செய்திகள்
இந்த முயற்சி வெற்றி பெற்றதையடுத்து, மேலும் 981 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்தத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

