புதுடெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு திங்கட்கிழமை அன்று (ஜனவரி 13) ஒரே நாளில் 27 காசுகள் சரிந்து ரூ.86.31 காசுகளாக வணிகமானது.
கடந்த வெள்ளிக்கிழமை ரூபாய் மதிப்பு 14 காசுகள் சரிந்து ரூ.86ஆக முடிந்தது.
இந்த நிலையில் இன்றைய வணிக நேரத் தொடக்கத்திலும் சரிவு நீடித்து மேலும் சரிவைச் சந்தித்தது.
பங்குச் சந்தையில் உள்ளூர் முதலீட்டாளர்களிடையே நிலவிய எதிர்மறையான நிலை மற்றும் அந்நிய நிதி முதலீடுகள் வெளியேற்றம் ஆகியவை ரூபாய் மதிப்பு சரிந்ததற்கான காரணங்கள் என நிபுணர்கள் கூறுவதாக தினமணி தகவல் வெளியிட்டுள்ளது.
இவ்வாரத்தின் முதல் நாளான ஜனவரி 13ஆம் தேதி பங்குச் சந்தை வணிகம் 0.9% சரிவுடன் தொடங்கியது.
அமெரிக்க மத்திய வங்கி, வட்டி விகிதங்களை அதிகரிக்கும் என்பதன் எதிரொலியாகவும் ரூபாய் மதிப்பு வணிக நேரத் தொடக்கத்தில் ரூ.86.12 காசுகளாக வணிகமானது. பின்னர் படிப்படியாகச் சரிந்து, வெள்ளிக்கிழமை மதிப்பை விட 27 காசுகள் சரிந்து ரூ.86.31 என்ற உச்சபட்ச சரிவை எட்டியது. இது, திங்கட்கிழமை நண்பகல் வரையிலான நிலவரமாகும். அந்நியச் செலாவணி காரணமாக வங்கிகளுக்கு இடையிலான ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து, மார்ச் மாதத்தில் 87 ரூபாயை எட்டும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.