புதுடெல்லி: இந்தியாவில் தனிநபர் வாழ்க்கைச் செலவினங்கள் அதிகமாக உள்ள நகரங்களின் பட்டியலில் மும்பை முதல் இடத்தில் உள்ளது.
இந்தியப் பெருநகரங்களில் தனிநபர் வருமானம் எந்த அளவுக்கு அதிகரிக்கிறதோ, அதே வேகத்தில் செலவினங்களும் அதிகரித்து வருகின்றன.
வீட்டு வாடகை தவிர்த்து, பிற செலவுகளுக்காக மட்டும், ஒவ்வொருவரும் ஆயிரக்கணக்கில் பணம் செலவிட வேண்டியுள்ளது. அந்த வகையில், இந்தியாவில் ஒரு தனிநபர் தங்குமிட வாடகையைத் தவிர்த்து, அன்றாட வாழ்க்கைக்காக மாதந்தோறும் ரூ.27,300 செலவிட வேண்டியிருப்பதாக ‘நம்பியோ’ நிறுவன ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுவே நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு கிட்டத்தட்ட ரூ.98,000ஆக உள்ளது.
உலக நகரங்களின் வாழ்க்கைச் செலவு புள்ளிவிவரங்களை ஆய்வு செய்து, அவ்வப்போது அறிக்கை வெளியிடுகிறது ‘நம்பியோ’. அந்த வகையில், 2026ஆம் ஆண்டிற்கான அறிக்கை வெளியாகி உள்ளது.
இந்தியாவின் பொருளியல் தலைநகரான மும்பைதான் மிக அதிக செலவினம் கொண்ட மாநகரம் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது. அங்கு வாடகையைத் தவிர்த்து ஒருவருக்கு ரூ.30,000 முதல் ரூ.60,000 வரை செலவாகிறது.
டெல்லி, புனே, பெங்களூரு, ஹைதராபாத் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 6வது இடத்தில் உள்ள சென்னையில் ஒருவருக்கு மாதந்தோறும் ரூ.15,000 முதல் ரூ.50,000 வரை செலவாகிறது.
ஆகக் குறைவாக செலவினங்கள் உள்ள மாநகரமாக கோல்கத்தா உள்ளது. அங்கு, ஒருவர் ரூ.20,000 முதல் 40,000 வரை செலவிட்டால் உணவு, போக்குவரத்து உட்பட அனைத்துச் செலவுகளையும் ஈடுகட்ட முடியும் என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.


