விசாகப்பட்டினம்: இந்தியாவின் மிக நீளமான கண்ணாடிப் பாலம் விசாகப்பட்டினத்தில் இம்மாதம் 25ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள கைலாசகிரி மலையின் உச்சியில் 55 மீட்டர் நீளத்தில் ஏழு கோடி ரூபாய் செலவில் அப்பாலம் கட்டப்பட்டுள்ளது. 38 மீட்டர் நீளம் கொண்ட கேரளாவின் கண்ணாடிப் பாலத்தைவிட இது நீளமானது. 40 மிமீ தடிமனான மூன்றடுக்கு ஜெர்மன் கண்ணாடிகள், கிட்டத்தட்ட 40 டன் எடைகொண்ட இரும்பு ஆகியவற்றைக் கொண்டு இப்பாலம் உருவாக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்து அமைக்கப்பட்டுள்ள அப்பாலத்தில் ஒரேநேரத்தில் 100க்கும் அதிகமானோர் நிற்கலாம். சதுர மீட்டருக்கு 500 கிலோ எடையைத் தாங்கக்கூடியது. எனினும், பாதுகாப்பை உறுதிசெய்ய 40 பேர் கொண்ட குழுவாக வருகையாளர்கள் அனுமதிக்கப்படுவர்.
கடல் மட்டத்திலிருந்து 862 அடி (262 மீட்டர்) உயரத்தில் அமைந்துள்ள அந்தப் பாலத்திலிருந்து வங்காள விரிகுடா, விசாகப்பட்டினத்தின் வானளாவிய, மலைப்பாங்கான நிலப்பரப்பு ஆகியவற்றின் கண்மயக்கும் ரம்மியமான காட்சிகளைக் காணலாம்.
மேலும், கைலாசகிரியில் 5.5 கோடி ரூபாய் செலவில் 55 அடி திரிசூல் கட்டமைப்பை உருவாக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.