புதுடெல்லி: இந்தியாவின் கிராமப்புறங்களில் கல்வியறிவு மேம்பட்டு உள்ளதாகவும் குறிப்பாக கிராமப் பெண்களிடையே கல்வியறிவு அதிகரித்து உள்ளதாகவும் மத்திய அரசாங்கம் தெரிவித்து உள்ளது.
மக்களவையில் நாட்டின் கல்வியறிவு குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தபோது மத்திய கல்வி துணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி இந்தத் தகவலைக் கூறினார்.
“கிராமங்களில் கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் கடந்த 2011ஆம் ஆண்டு 67.77 விழுக்காடாக இருந்தது. 2023-24ஆம் ஆண்டு அது 77.5 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
“மேலும், கல்வியறிவு பெற்ற பெண்களின் விகிதம் இதே காலகட்டத்தில் 57.93 விழுக்காட்டில் இருந்து 70.4 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
“கல்வியறிவு பெற்ற ஆண்களின் விகிதமும் 77.15 விழுக்காட்டில் இருந்து 84.7 விழுக்காடாக உயர்ந்து உள்ளது.
“கிராமப்புறங்களில் கல்வியறிவு பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க ‘சமக்ர சிக்ஷா’ திட்டம், ‘சாக்ஸர் பாரத்’, ‘பதானா லிகானா’ திட்டம், ‘யுஎல்எல்ஏஎஸ் - நவ் பாரத் சாக்ஸரத்தா’ நிகழ்ச்சி ஆகியவற்றை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
“அந்தத் திட்டங்கள் கல்வியறிவில் பின்தங்கியுள்ள கிராமங்களில் நல்ல பலனை அளித்துள்ளன. ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் கல்வியறிவு தொடர்பான தேர்வுகளில் பங்கேற்றுள்ளனர்,” என்று அமைச்சர் விவரித்தார்.