புதுடெல்லி: பயணிகள் கட்டணம் செலுத்தி, இருக்கையைத் தெரிவுசெய்துகொள்ளும்படி கட்டாயப்படுத்தப்படுவதாகப் பல புகார்கள் வந்த நிலையில், இண்டிகோ விமான நிறுவனம் சனிக்கிழமை அதற்கு விளக்கமளித்துள்ளது.
இணையவழி உட்பதிவு (வெப் செக் இன்) கட்டாயத் தேவையன்று எனக் குறிப்பிட்டுள்ள இண்டிகோ, ஆயினும் இடையூறு இல்லாத அனுபவத்திற்கு அச்சேவையை நாடும்படி வாடிக்கையாளர்களுக்குப் பரிந்துரைப்பதாகக் கூறியுள்ளது.
“அப்படியெனில், ஏன் இணையவழி உட்பதிவு கட்டாயம் என்று மின்னஞ்சலில் அனுப்புகிறீர்கள்? இருக்கைகளுக்குக் கட்டணம் வசூலிக்கிறீர்கள்?” என்று இணையவாசி ஒருவர் கேட்டார்.
அதற்கு, இணையவழி உட்பதிவு சேவைக்குக் கட்டணமில்லை என்றும் பயணி ஒருவர் குறிப்பிட்ட இருக்கையைத் தெரிவுசெய்தால் அதற்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் இண்டிகோ விளக்கமளித்துள்ளது.
மேலும், பயண முன்பதிவின்போது காலியாக இருக்கும் இலவச இருக்கைகளிலிருந்து தெரிவு செய்துகொள்ளலாம் அல்லது கணினியே இருக்கையை ஒதுக்கித் தரும்படி விட்டுவிடலாம் என்றும் அதற்குக் கட்டணம் இல்லை என்றும் அந்நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
இதனிடையே, விமான நிறுவனங்கள்மீது தேசிய பயனீட்டாளர் உதவி அழைப்பு எண் மூலமாக பயனீட்டாளர்கள் அளிக்கும் புகார்கள் அதிகரித்துள்ளது.
இதனையடுத்து, நவம்பர் 4ஆம் தேதி நடக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி அனைத்து முன்னணி விமான நிறுவனங்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய பயனீட்டாளர் விவகாரத் துறைச் செயலாளர் ரோகித் குமார் சிங் கடந்த வியாழக்கிழமை தெரிவித்திருந்தார்.

