விமானத்தில் நின்றவாறே பயணம் செய்ததால் அதிர்ச்சி!

விமானத்தில் நின்றவாறே பயணம் செய்ததால் அதிர்ச்சி!

1 mins read
2048fd19-9b0d-4067-b5fa-5ad1f3e532bf
பயணி ஒருவர் விமானத்தில் நின்றவாறே பயணம் செய்யவிருந்ததை இண்டிகோ நிறுவனம் உறுதிப்படுத்தியது. - படம்: ஊடகம்

மும்பை: விமானத்திலுள்ள இருக்கைகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் கூடுதலாக முன்பதிவு செய்யப்பட்டதால், பயணி ஒருவர் நின்றவாறே பயணம் செய்ய ஆயத்தமானார்.

ஆனாலும், அதற்கு இடங்கொடுக்காத விமானி, மீண்டும் விமானத்தை அதற்குரிய இடத்திற்கே திருப்பிச் சென்றார்.

மும்பை - வாரணாசி இடையே செவ்வாய்க்கிழமை (மே 21) இயக்கப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

காலை 7.50 மணியளவில் 6E 6543 என்ற அவ்விமானம் வானில் பறக்க தயாரான நிலையில், ஆண் பயணி ஒருவர் விமானத்தின் பின்பகுதியில் நின்றபடி இருந்ததை விமானப் பணியாளர் கண்டார்.

அதனையடுத்து, உடனடியாக அதுபற்றி விமானிக்குத் தகவல் தெரிவிக்கப்பட, விமானம் மீண்டும் மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் அனைத்துலக விமான நிலையத்திற்கே திருப்பப்பட்டது என்று சந்தீப் பாண்டே என்ற பயணி கூறினார்.

உரிய இடத்திற்குத் திரும்பியபின் அப்பயணி இறக்கிவிடப்பட்டார் எனவும் மற்ற எல்லாப் பயணிகளின் உடைமைகளும் உள்ளனவா என்று சரிபார்க்கப்பட்டபின் விமானம் மீண்டும் புறப்பட்டுச் சென்றது எனவும் அகிலேஷ் சௌபே என்ற பயணி சொன்னார்.

இதனால், விமானம் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றதாகக் கூறப்பட்டது.

சம்பவத்தை இண்டிகோ நிறுவனமும் உறுதிப்படுத்தியது.

காலி இருக்கைகளுடன் புறப்பட சாத்தியமுள்ளதால் விமான நிறுவனங்கள் விமானத்திலுள்ள இருக்கை எண்ணிக்கையைக் காட்டிலும் கூடுதல் பயணிகள் முன்பதிவு செய்வது வழக்கந்தான் எனக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்