மும்பை: வியாழக்கிழமை (பிப்ரவரி 19) இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை எதிர்கொண்டன. இதன் எதிரொலியாக முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
பங்குச் சந்தைகளில் பங்குகளின் மதிப்பு ஏற்ற இறக்கங்களைச் சந்திக்க பல்வேறு காரணிகள் உள்ளன. எனினும் இவற்றுள் பெரும்பாலான காரணிகள் கட்டுக்குள் இருப்பது வழக்கம்.
இந்நிலையில், வியாழக்கிழமை இந்தியச் சந்தையில், பல்வேறு உலகளாவிய அரசியல் பதற்றங்களின் தாக்கத்தை உணர முடிந்ததாக நிபுணர்கள் தெரிவித்தனர்.
குறிப்பாக அமெரிக்கா, ஈரான் இடையிலான மோதல் போக்கு அதிகரித்துள்ளது உலக முதலீட்டாளர்களைக் கவலையடையச் செய்துள்ளது.
இதனால் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற சூழலால் ஏராளமான முதலீட்டாளர்கள் தங்களிடம் உள்ள பங்குகளை விற்கத் தொடங்கியதாகவும் இதன் மூலம் தங்களுக்குக் கிடைத்த லாபத்தை உறுதி செய்ய அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டதாகவும் தெரிகிறது.
ஒரு கட்டத்தில் இந்த விற்பனை வேகம் எடுத்ததாகவும், தொழில்நுட்ப ரீதியாக பங்குச்சந்தை அதன் முக்கிய நிலைகளைக் கடந்த குறியீடு கீழே இறங்கியதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
அந்த வகையில், வியாழக்கிழமை மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1,236.11 புள்ளிகள் சரிந்து 82,498.14 என்ற அளவில் நிலைபெற்றது.
அதேபோல், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 365 புள்ளிகள் சரிந்து 25,454.35ல் நிலைகொண்டது.
தொடர்புடைய செய்திகள்
மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனப் பங்குகளின் ஒட்டுமொத்த சந்தை மூலதன மதிப்பு ரூ.472 லட்சம் கோடி ஆகும். வியாழக்கிழமை ஏற்பட்ட இழப்புக்குப் பின்னர், மொத்த மூலதன மதிப்பு ரூ.464 லட்சம் கோடியானது. இதன் மூலம் ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.8 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.
இது தற்காலிக இழப்பு என்று முதலீட்டாளர்களில் ஒரு தரப்பினர் நம்புகின்றனர். அதேசமயம், சந்தையில் நிலவும் சூழல் கவலை அளிப்பதாக மற்றொரு தரப்பினர் கருதுகின்றனர்.

