மும்பை: இந்தியாவிலிருந்து மாம்பழ இறக்குமதியை ஜப்பான் நிறுத்தியுள்ளது. பூச்சிக் கட்டுப்பாட்டு நடைமுறைகளில் இருக்கும் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி இந்த நடவடிக்கையை அந்நாட்டு அரசு எடுத்துள்ளது.
இருபது ஆண்டுகளுக்குப் பின், இந்திய மாம்பழங்களின் இறக்குமதிக்கு ஜப்பான் மீண்டும் தடை விதித்துள்ளது. கோடைக்கால மாம்பழப் பருவம் உச்சத்தில் இருக்கும் நேரத்தில் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள இத்தடை, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்றுமதிக்கு முன் செய்யப்படும் சுத்திகரிப்பு நடைமுறைகள், ஜப்பானின் தரக்கட்டுப்பாட்டு விதிகளுக்கேற்ப சரியாக பின்பற்றப்படவில்லை எனக் கூறி, இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாம்பழங்களைப் பதப்படுத்தும் மையங்களில் உள்ள பூச்சிக் கட்டுப்பாட்டு நடைமுறைகளில் குறைபாடுகள் இருப்பதை அதிகாரிகள் சுட்டிக்காட்டி இருந்தனர்.
ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அல்போன்சோ, கேசர், லங்ரா, பங்கனபள்ளி உள்ளிட்ட உயர்தர மாம்பழங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதற்கு முன்னர், பூச்சிக் கட்டுப்பாட்டு நடைமுறைகளில் நிலவிய குறைபாடு காரணமாக ஜப்பான் இதேபோன்ற தடையை விதித்திருந்தது. இந்தியா நடவடிக்கை எடுத்து தரத்தை மேம்படுத்திய பின்னரே, 2006ல் தடை நீக்கப்பட்டது.
இந்தியாவின் மிகப்பெரிய வெளிநாட்டு மாம்பழச் சந்தைகளில் ஜப்பான் இடம்பெறவில்லை என்றாலும், இந்தத் தடை இந்திய விவசாயிகள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

