திருச்சூர்: கேரள மாநில பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) அதிகாரிகள் திருச்சூரில் உள்ள நகைக்கடைகளில் நடத்திய சோதனைகளில், அவை ரூ.100 கோடி மதிப்பிற்கு விற்பனையை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
‘ஆர்க்கென்ஸ்டோன்’ எனும் பெயரில் ஆகஸ்ட் 26ஆம் தேதி மாலை 4.30 மணிக்குத் தொடங்கிய அதிரடிச் சோதனை நடவடிக்கை மறுநாள் வரையிலும் நீடித்தது.
ஜிஎஸ்டி புலனாய்வு, அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த கிட்டத்தட்ட 200 அதிகாரிகள் நகைக்கடைகளில் அதிரடிச் சோதனைகளை மேற்கொண்டதாக வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) ஜிஎஸ்டி கூடுதல் ஆணையர் ஓர் அறிக்கை வாயிலாகத் தெரிவித்தார்.
திருச்சூர் மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 16 நகை வணிகர்களின் கடைகள், வீடுகள் உட்பட 42 இடங்களில் சோதனை இடம்பெற்றது.
அப்போது, கணக்கில் காட்டாமல் கள்ளத்தனமாக மறைத்து வைத்திருந்த 36 கிலோ தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.
முதற்கட்டக் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், வரியாகவும் அபராதமாகவும் ரூ.2 கோடிக்கும் அதிகமான தொகையை அதிகாரிகள் வசூலித்தனர். வரி ஏய்ப்பில் ஈடுபட்டோர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜிஎஸ்டி ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்ற ஆண்டும் திருச்சூரில் அதிகாரிகள் இதுபோன்று ஒரே நேரத்தில் 75 இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது, 35 நகைக்கடைகளிலிருந்து கணக்கில் காட்டப்படாத 105 கிலோ தங்கத்தை அவர்கள் கைப்பற்றினர்.
கேரளத்தில் தங்க நகை வடிவமைப்பு, தயாரிப்பைப் பொறுத்தமட்டில், திருச்சூர் முக்கிய மையமாகத் திகழ்ந்து வருகிறது என்று ஜிஎஸ்டி அதிகாரிகள் தெரிவித்தனர்.