இடுக்கி: கேரளாவில் மாவெள்ளிக்கரா பகுதியில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப் பேருந்து ஒன்று தஞ்சாவூர் சென்றது. இதன்பின்னர் சுற்றுலாத் தலங்களை பயணிகள் பார்வையிட்டதும், மீண்டும் மாவெள்ளிக்கரா நோக்கி அந்தப் பேருந்து திரும்பி வந்து கொண்டிருந்தது.
இந்நிலையில், இடுக்கி மாவட்டத்தில் குட்டிக்கானம் மற்றும் முண்டகாயம் ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் புள்ளுப்பரா என்ற இடத்திற்கு அருகே சென்றபோது பேருந்து, திடீரென விபத்தில் சிக்கியது.
இதில், 34 பயணிகளுடன் சென்ற பேருந்து திங்கட்கிழமை காலை 6.15 மணியளவில் 30 அடி ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஒரு பெண் உள்பட நால்வர் உயிரிழந்தனர். அவர்கள் அருண், மோகன், சங்கீத் மற்றும் பிந்து என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.
விபத்தில் காயமடைந்த நபர்கள் அருகேயுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். மீட்புப் பணிகளும் தொடர்ந்து வருகின்றன. இரு பயணிகளின் நிலை கவலைக்குரிய வகையில் உள்ளது எனக் கூறப்படுகிறது. பேருந்தில் பிரேக் சரிவர செயல்படாத சூழலில் விபத்து நடந்துள்ளது என பயணிகளில் சிலர் தெரிவித்தனர். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

