புதுடெல்லி: இந்தியாவின் முன்னாள் மாநில அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சி உறுப்பினருமான பாபா சித்திக்கின் கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபரான ஷிவ் குமார் கெளதம், திரு பாபா சித்திக் மாண்டதை உறுதிசெய்ய லீலாவதி மருத்துவமனைக்கு வெளியே காத்துக்கொண்டிருந்ததாகக் கூறினார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
திரு சித்திக் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக நம்ப்படும் நபர் அதற்குப் பிறகு விரைவில் சட்டையை மாற்றிக்கொண்டார். சுடப்பட்ட பிறகு திரு சித்திக் கொண்டு செல்லப்பட்ட லீலாவதி மருத்துவமனைக்கு வெளியே சந்தேக நபர் கூட்டத்தில் ஒருவராக அரை மணிநேரம் காத்திருந்திருக்கிறார்; திரு சித்திக் கவலைக்கிடமாக இருந்தது தெரிந்தவுடன் அவர் அவ்விடத்திலிருந்து புறப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த அக்டோபர் மாதம் 12ஆம் தேதி இரவு 9.11 மணிக்கு 66 வயதான திரு சித்திக் மும்பையின் பேண்டிரா பகுதியில் சுடப்பட்டார் என்று காவல்துறையினர் கூறினர். அவரின் நெஞ்சுப் பகுதியில் இரு தோட்டாக்கள் துளைத்தன.
அவசரமாக லீலாவதி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட திரு சித்திக் அங்கு உயிரிழந்தார்.

