கொச்சி: தமது நடத்தை மீது சந்தேகப்பட்ட மனைவியைக் கத்தியால் குத்திய முதியவரை கேரள உயர் நீதிமன்றம் பிணையில் விடுவித்து உள்ளது.
91 வயதான தேவன் என்பவர் 88 வயதான குஞ்சாலி என்னும் தமது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார்.
தேவனின் நடத்தையில் மனைவிக்கு அவ்வப்போது சந்தேகம் எழுந்தது. அவர் பல பெண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக குஞ்சாலி வெளிப்படையாகவே கூற ஆரம்பித்தார்.
அது அவரது கணவர் தேவனுக்கு எரிச்சலூட்டியது.
மீண்டும் மீண்டும் தமது மனைவி தம்மை அவமானப்படுத்துவதாகக் கருதி, கோபமடைந்த தேவன், கடந்த மார்ச் 21ஆம் தேதி குஞ்சாலியைக் கத்தியால் குத்தினார்.
படுகாயமடைந்த குஞ்சாலி உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அன்றைய தினமே தேவன் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், தமக்கு பிணை வழங்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் தேவன் மனுத் தாக்கல் செய்தார்.
தொடர்புடைய செய்திகள்
தம்பதியர் இருவரின் வயதுக்கு முன்னுரிமை அளித்து வியாழக்கிழமை (ஏப்ரல் 10) பிணை வழங்கிய நீதிபதி பி.வி. குன்ஹிகிருஷ்ணன், குற்றவாளியான தேவனுக்கும் அவரது மனைவிக்கும் அறிவுரை கூறினார்.
“வயது முதிர்ந்த காலத்தில் கணவரும் மனைவியும் ஒருவருக்கொருவர் துணை என்பதே பலம். அதனை இருவருமே உணரவேண்டும்,” என்று நீதிபதி தெரிவித்தார்.