பாட்னா: பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் பேரன் ஆதித்யா, சிங்கப்பூர் ராணுவப் பயிற்சியில் இணைந்துள்ளார்.
லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி தம்பதியருக்கு மொத்தம் ஒன்பது பிள்ளைகள். அவர்களில் இரண்டாவது மகள் ரோஹினி ஆச்சார்யாவின் மகன் ஆதித்யா தற்போது சிங்கப்பூரில் வசிக்கிறார்.
18 வயதை நிறைவு செய்துள்ள ஆதித்யா, சிங்கப்பூர் சட்டப்படி ராணுவத்தில் சேர்ந்து அடிப்படைப் பயிற்சி பெற உள்ளதாக அவரது தாயார் ரோஹினி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தனது மகன் இரண்டு ஆண்டுகளுக்கு ராணுவப் பயிற்சியில் ஈடுபட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“வாழ்வின் கடினமான போர்களில்தான் வீரர்கள் உருவாகிறார்கள் என்பதை மட்டும் நினைவுகொள். எங்களது அன்பும் ஊக்கமும் என்றும் உன்னுடன் இருக்கும். துணிச்சலும் ஒழுக்கமும் கொண்ட நீ அற்புதங்களை செய்து திரும்புவாயாக,” எனத் தமது பதிவில் ரோஹினி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

