லண்டன்: பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் கடந்த புதன்கிழமை (ஜூன் 10) நடந்த கத்திக்குத்துத் தாக்குதலில் 26 வயது இந்திய வம்சாவளி ஆடவர் ஒருவர் கொல்லப்பட்டதாகப் பெருநகரக் காவல்துறை சனிக்கிழமை தெரிவித்தது.
உயிரிழந்தவர் குர்பேஜ் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தகவலறிந்ததும் லண்டன் அவசர மருத்துவ வாகனச் சேவையினரும் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு கத்திக்குத்துக் காயங்களுடன் குர்பேஜ் சிங்கையும் 30 வயது மதிக்கத்தக்க இன்னொருவரையும் அவர்கள் கண்டனர்.
மருத்துவக் குழுவினர் தீவிரமாக முயன்றபோதும், குர்பேஜ் சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
இரவு 12:30 மணியளவில் கடை ஒன்றின் வெளியே குர்பேஜ் சிங் தாக்கப்பட்டதாகக் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
அதன் தொடர்பில் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட எழுவரைக் காவல்துறையினர் சந்தேகத்தின்பேரில் கைது செய்தனர். அவர்களில் அறுவர் விடுவிக்கப்பட்டனர். ஒருவர் மட்டும் பிணையில் விடுவிக்கப்பட்டு, பின்னர் விசாரணையில் முன்னிலையாக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்புப் படக்கருவிகளில் அதுதொடர்பான காட்சிகள் ஏதேனும் பதிவாகியிருந்தால் அல்லது சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் உடனடியாகத் தொடர்புகொண்டு விவரங்களை வழங்குமாறு காவல்துறை கோரியுள்ளது.
இதற்கிடையே, உயிரிழந்த குர்பேஜ் சிங்கின் உடலை இந்தியாவிற்குக் கொண்டுசெல்லவும் இறுதிச் சடங்குச் செலவுகளுக்காகவும் ‘கோஃபண்ட்மீ’ இணையத்தளம் வழியாக நிதி திரட்டப்பட்டு வருகிறது.

