சென்னை: மத்தியப் பிரதேசத்தில் நிகழ்ந்த படகு விபத்தில் மாண்ட ஒன்பது பேரில் ஐவர் தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுப்பயணிகள் என்பது தெரிய வந்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஜபல்பூரில் உள்ள பார்கி அணைக்கட்டில் வியாழக்கிழமை (ஏப்ரல் 30) ஒரு சுற்றுலாப் படகு கவிழ்ந்தது. அதனைத் தொடர்ந்து, ஒன்பது பேர் மூழ்கி உயிரிழந்தனர்.
அவ்விபத்தில் மாண்டோரில் மூவர் திருச்சியைச் சேர்ந்தவர்கள், இருவர் திருப்பூரைச் சேர்ந்தவர்கள்.
திருச்சியைச் சேர்ந்த 38 வயது ஆடவரும் அவரின் 38 வயது மனைவியும் நான்கு வயது மகனும் உயிரிழந்தனர். அந்த ஆடவருடைய மனைவியின் உறவினரான 42 வயது மாது, அவரின் எட்டு வயது மகன் ஆகியோரும் கொல்லப்பட்டனர். அந்த இருவரும் திருப்பூரைச் சேர்ந்தவர்கள்.
ஐவரின் உடல்களையும் அவசர மருத்துவ உதவி விமானம் அல்லது ஹெலிகாப்டரில் சனிக்கிழமை (மே 2) தமிழகத்துக்குக் கொண்டுவர அந்த மாநில அதிகாரிகள், மத்தியப் பிரதேச அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அப்படகு விபத்தில் ஒரு பெண்ணின் உடல், தனது பிள்ளையை அணைத்தபடி இருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக முன்னதாகத் தெரிவிக்கப்பட்டது. கவிழ்ந்த படகில் மொத்தம் 29 பயணிகள் இருந்தனர்.

