பெங்களூரு: மேகதாது அணை விவகாரம் தொடர்பாகத் தமிழகத்திலும் கர்நாடகாவிலும் போராட்டங்கள் நீடித்து வருகின்றன.
இந்நிலையில், கர்நாடக மாநில எல்லையில் கன்னட அமைப்பினர் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 10) மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தது பதற்றத்தை ஏற்படுத்தியது.
இதன்காரணமாக இரு மாநில எல்லையில் உள்ள ஓசூர் பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
ஓசூரில் இருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டும் பணியை உடனடியாகத் தொடங்க வேண்டும் எனக் கன்னட அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
இதுதொடர்பாக கர்நாடக அரசை வலியுறுத்தியும் தமிழக அரசைக் கண்டித்தும் கன்னட அமைப்புகள் அம்மாநில எல்லையில் மறியலில் ஈடுபட்டன.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓசூரில் இருந்து கர்நாடகா மாநிலத்துக்குச் செல்லும் அனைத்து அரசுப் பேருந்துகளும் ஓசூர் எல்லையில் நிறுத்தப்பட்டன. எனினும், கர்நாடக அரசுப் பேருந்துகள் தமிழகத்துக்குள் வழக்கம்போல் சென்று திரும்பின.
கன்னட அமைப்பினரின் போராட்டம் முடியும் வரையில் தமிழகப் பேருந்துகள் கர்நாடகாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டாது எனக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


