பெங்களூரு: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடகாவைச் சேர்ந்த சில அமைப்புகள் மறியல் போராட்ட அறிவிப்பை வெளியிட்டதை அடுத்து இரு மாநில எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவியது. இதனால் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) தமிழகப் பேருந்துகள் ஓசூரில் நிறுத்தப்பட்டன.
மேகதாது அணை தொடர்பாக தமிழக, கர்நாடகா அரசுகள் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் காவிரி நீரில் தங்களுக்குள்ள உரிமையைப் பாதுகாக்கப் போவதாகக் கூறி அவ்வப்போது போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த கன்னட ஜாக்கிருதி வேதிகே என்ற அமைப்பு இரு மாநில எல்லைப் பகுதியில் சாலை மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததையடுத்து பதற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து, அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் இரு மாநில எல்லைப் பகுதிகளான ஜூஜூவாடி, அத்திப்பள்ளியில் இருமாநிலக் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
தமிழகப் பேருந்துகள் எல்லையைக் கடக்க அனுமதிக்கப்படவில்லை. எனினும், கர்நாடக மாநில அரசு, தனியார் பேருந்துகள் வழக்கம்போல் தமிழக எல்லையை கடந்து இயங்கின.

