புதுடெல்லி: பார்வையற்ற பெண்களுக்கான முதல் ‘டி20’ உலகக் கிண்ணத்தை வென்று வரலாறு படைத்த இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது உண்மையிலேயே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க விளையாட்டுச் சாதனை என்று அவர் தமது சமூக ஊடகப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் இந்தியா, இலங்கையில் பார்வையற்ற மகளிர்க்கான ‘டி20’ உலகக் கிண்ணப் போட்டித் தொடர் நடைபெற்றது.
இதில், இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட ஆறு அணிகள் பங்கேற்றன. இந்தத் தொடரில் இந்திய அணி வாகைசூடியது. இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, ஏழு விக்கெட் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தியது.
இதையடுத்து, உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய அணியின் வீராங்கனைகளை பிரதமர் மோடி நேரில் அழைத்துப் பாராட்டினார். அவர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்த அவர், கிரிக்கெட் மட்டையைப் பரிசாக வழங்கினார்.
இந்தச் சந்திப்பு குறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள திரு மோடி, இந்திய அணியின் கடின உழைப்பிற்கு அண்மைய வெற்றி சிறந்த எடுத்துக்காட்டு என்றும் இந்த வெற்றியை அடுத்து, வரும் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இந்திய அணியின் இந்தச் சாதனை வருங்கால சந்ததியினருக்கு ஊக்கம் அளிக்கும்,” என திரு மோடி நம்பபிக்கை தெரிவித்துள்ளார்.

