புதுடெல்லி: சிறைக்குள் இருந்தபடி கைதி ஒருவர் வெளியிட்ட காணொளியால் சிறைத்துறை அதிகாரிகள் நால்வர்மீது நடவடிக்கை பாய்ந்தது.
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், பரேலி மத்திய சிறையில் ஆசிஃப் கான் என்ற ஆடவர் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2019 டிசம்பர் 2ஆம் தேதி ராகேஷ் யாதவ், 34, என்ற பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரரைக் கொன்ற வழக்கில் ஆசிஃப்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ராகுல் சௌத்ரி என்பவருடன் சேர்ந்து அவர் அந்தக் கொலையைச் செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அண்மையில் சிறைக்குள் இருந்தபடி ஆசிஃப் திறன்பேசி வழியாக காணொளிமூலம் உரையாடினான். அதில், “நான் சொர்க்கத்தில் இருக்கிறேன், மகிழ்ச்சியாக அனுபவிக்கிறேன். விரைவில் சிறையைவிட்டு வெளியில் வருவேன்,” என்று ஆசிஃப் கூறினான்.
சமூக ஊடகத்தில் இந்தக் காணொளியைக் கண்ட யாதவின் சகோதரர், உடனடியாக மாவட்ட நீதிபதி உமேஷ் பிரதாப் சிங்கைச் சந்தித்து, புகார் அளித்தார்.
இதனையடுத்து, பரேலி மத்திய சிறைக் காவலர்கள் மூவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்; சிறைத் துணை அலுவலர் லக்னோவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
முன்னதாக, ஆசிஃபும் ராகுலும் ஷாஜகான்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அங்கு அவர்கள் சொகுசாக இருப்பதாக யாதவின் சகோதரர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் பரேலி சிறைக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.