ஆக்ரா: தன் மனைவி ‘குட்கா’ மெல்லுவதில் பித்தராகிவிட்டதாக ஆடவர் ஒருவர் புகாரளித்ததால் காவல்துறை வியப்படைந்தது.
இச்சம்பவம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில, ஆக்ராவில் நிகழ்ந்தது.
தன் மனைவி அதிகாலையில் எழுந்து, குட்காவை மென்றுகொண்டே எல்லா வீட்டு வேலைகளையும் செய்வதாகவும் வீடு முழுக்க கண்ட இடங்களில் எச்சிலைத் துப்புவதாகவும் அந்த ஆடவர் புகாரளித்துள்ளார்.
ஆனால், தன் கணவருக்குப் பல பெண்களுடன் தொடர்புண்டு என்று அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
அதனை மறுத்த அந்த ஆடவர், குட்கா மென்றுகொண்டே இருப்பதால் தன் மனைவியைவிட்டுத் தான் பிரிந்துவிட்டதாகவும் அதனைத் தொடர்ந்து அவர் தன்மீது பொய்க் குற்றச்சாட்டு சுமத்துவதாகவும் கூறியுள்ளார்.
தான் குட்கா மெல்லுவது பிறருக்குத் தெரியக்கூடாது என்பதற்காக அப்பெண் முகத்திரை அணிந்தபடி குட்கா மெல்லுவதாகச் சொல்லப்படுகிறது. அப்பழக்கத்தைக் கைவிடும்படி கணவர் வீட்டார் பலமுறை எடுத்துக்கூறியும் அவர் செவிமடுக்கவில்லை.
இதனால் வெறுத்துபோன கணவர், தன் மனைவியைவிட்டுப் பிரிய, விவகாரம் குடும்ப ஆலோசனை மையத்திற்குச் சென்றது.
ஆனாலும், குட்கா மெல்லும் பழக்கத்தை அப்பெண் கைவிட மறுப்பதால் அவருடைய திருமணம் முறிந்துபோகும் நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும், இன்னொரு நாளில் ஆலோசனைக்கு வருமாறு அந்தக் கணவனும் மனைவியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


